பனிவரகு மசாலா உருண்டை
தேவையான பொருட்கள்
- பனிவரகு மாவு - அரை கப்
- சின்ன வெங்காயம் - 6
- தக்காளி - 3
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- மசாலா பொடி - ஒரு மேசைக்கரண்டி (மிளகாய், தனியா, பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம் பொடித்தது)
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
- செக்கு கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி
செய்முறை
பனிவரகு மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, சூடான தண்ணீர் விட்டுக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டிய உருண்டைகளை இட்லிப் பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மசாலா பொடி சேர்த்து வேக வைத்த பனிவரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். பனிவரகு மசாலா உருண்டை தயார்.
குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலைச் சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான தானிய உணவு.