பழங்களும், காய்கறிகளும் பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பல கடுமையான வேதிப் பொருட்களையும் நஞ்சுகளையும் தெளித்துத் தயாராவதை நாம் அறிவோம். திராட்சை, காலிபிளவர் போன்றவை பல ரசாயன விஷங்கள் கலந்த நீரில் மூழ்கி எடுத்த பின்னரே சந்தைக்கு வருகின்றன. சூப்பர் மார்க்கட் எனப்படும் பெரும் கடைகளில் விற்பனைக்கு வரும் பழங்கள் யாருடைய தயாரிப்பு என்று தெரிவதற்காக காகித மற்றும் பிளாஸ்டிக் முத்திரை ஒட்டப் பெற்று வருவதையும் சில காலமாகக் காண்கிறோம். இனி இதையெல்லாம் தாண்டி நம் பழங்கள் லேசர் கதிர்களால் சுடப் பெற்று வருவதை விரைவில் காணலாம்!
ஆம், தயாரிப்பாளரின் முத்திரையும் அடையாளமும் இனிமேல் லேசர் கதிர்களால் பழங்களில் சுடப் பெற்று , அவை தெளிவாய்த் தெரிவதற்காகப் பல ரசாயனங்கள் பூசப் பெற்று வரும். இதை ஐக்கிய ஐரோப்பா (European Union) 2013 ஜூன் மாதம் 23 தேதியிலிருந்து அனுமதித்துள்ளது. உலகச் சந்தையில் முன்னிலையிலுள்ள பாரத நாட்டில் இவை விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை. சுடாத பழம் இனி அவ்வைக்கும் அந்த முருகனால் கூடக் கொடுக்க இயலுமா என்று தெரியவில்லை!