நாட்டு கம்பு சட்னி - நாச்சாள்
முற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு).
கம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.
தேவையான பொருட்கள்
- நாட்டு கம்பு - 1/4 கோப்பை
- கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
- வெங்காயம் -1
- இந்து உப்பு - தேவையான அளவு
- செக்கு நல்லெண்ணெய்
- மிளகாய் - காரத்திற்கேற்ப
- கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க
செய்முறை
முதலில் நாட்டுக் கம்பை வாணலியில் கொட்டி, அடுப்பை தணித்து, கை விடாது வறுக்க வேண்டும். சிவக்க துவங்கியதும் கம்பு சோளம் போல் பொரிக்கும், நொடி கூட தாமதிக்காமல் அடுப்பை விட்டு இறக்கவும் இல்லை என்றால் கருகி விடும்.
அடுத்தாக வாணலியில் செக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமனதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அடுப்பை விட்டு இறக்கி வதக்கிய கம்பையும் இந்து உப்பையும் சேர்த்து ஆற வைத்து அரைக்கவும். வாணலியில் சிறிது செக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை அரைத்த வைத்த சட்னியுடன் சேர்த்து இட்லி, தோசை, பொங்கல், அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும். மணமும் சுவையும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.