[கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)]
காற்று, நீர், உணவு ஆகியன நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதன. இவையனைத்துமே மாசுபட்டுத் தரங்கெட்டுவிட்டன. மேலும், நம் உணவு பெரும்பாலும் சந்தையில் வாங்கிவிற்கிற வணிகப் பண்டமாகிவிட்டது. (தண்ணீரும் அதுபோலவே ஆகி வருகிறது.) இதற்கு முழுமுதற் காரணமான உலகளாவிய, ஆலைமயமான உணவு உற்பத்தி முறைமை தவிர்க்கமுடியாதது மட்டுமின்றி இத்தகைய சந்தைப் பொருளாதாரமே அனைவருக்கும் சிறந்தது என்கிற மாயை உலெகங்கும் பரப்பப்பட்டுள்ளது. ஒன்றிய நாடுகளவை வெளியிட்ட 'நிலைத்த மேம்பாட்டு'க்கான முன்னீடுகளும் இதை அடிப்படையாகக் கொண்டவையே. உலகம் முழுவதையும் தம் வணிகக் களமாக மாற்றியுள்ள பெருநிறுவனங்களின் போக்கைத் திருத்தினாலே சூழல் கேடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிற மிகத் தவறான வாதத்தைப் போலவே மேற்கண்ட மாயையும் தவறானது.
உணவு என்பது முற்காலத்தில் இருந்ததைப் போலவே அனைத்து மக்களுக்கும் உரிமையான பொதுச் சொத்தாக மீண்டும் கருதப்படவேண்டும். அத்தகைய கருத்துப் பரவினால் மட்டுமே உணவு உற்பத்தி செய்வோர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் நியாயங் கிடைக்கும். அப்போது தான் உணவு உற்பத்தி முறையும் சூழல் உள்ளிட்ட பொது நலன்களுக்கு ஏற்றதாக அமையும். உற்பத்தியும் வழங்கலும் பகுதிசார்ந்தனவாகவும் அதே சமயம் சந்தை விதிகள், அரசுச் சட்டங்கள், மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் ஆகிய அனைத்துக் கூறுகளும் ஒருங்கிணைந்தனவாகவும் இருக்கும். அறநெறி, சட்டம், பொருளாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அனைத்தின் மீதும் இது பெருமளவு தாக்கம் செலுத்தும்.
தமிழாக்கம் - விஜயப்ரியா
[ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளரான ஹர்ஷ் மந்தர் அவர்கள் பஞ்சம் , வறட்சி ஆகியவற்றைச் சற்றும் சட்டை செய்யாமல் எல்லாம் மிளிர்வதுபோல் ஒரு மாயையில் அரசு இயந்திரமும், நிர்வாகிகளும் வலம் வருவதைச் சாடி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 08/02/2016 அன்று எழுதிய கட்டுரை. உலகமயமாக்கலால் வலுத்தவர் மேலும் வலுத்தும், இளைத்தவர் மேலும் இளைத்தும் போவார்கள் என்பதற்கு இப்பொதைய நிலைமை ஒரு நல்ல சான்று]
மறைக்க மற்றும் மறுக்கப்பட்ட வறட்சி: பல மாநிலங்களின் மக்கள் உணவு மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையால் வாடும் போது அத்துயரக்கண்ணீருக்கு நாம் புறமுதுகு காட்டுகிறோமா? நமது இந்திய தேசம் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வியப்பூட்டும் ஆச்சரியகரமான மாற்றங்களைக் கண்டுள்ளது. சில மாற்றங்கள் நம்மை மிகவும் வருத்தப்படவும் வைக்கின்றன. இதில் வேதனைப்படக்கூடிய மாற்றம் ஒன்று என்னவெனில், நமது அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் மக்கள் வறட்சியைக் கையாளும் விதம்தான்.
1980 ம் ஆண்டு நான் மாவட்ட ஆட்சியராக சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாவட்டங்களில் பணியாற்றும் போது தொடர்ந்து மூன்று வருடங்கள் அங்கு வறட்சி நிலவியது. தற்சமயம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் நமது நாடு எதிர் கொண்டிருக்கும் சூழல் அதனின்றும் வேறுபட்டதல்ல. அதே தொடர் வறட்சியாகவே இருக்கிறது.ஆனால் 1980 ம் ஆண்டில் நாம் வறட்சியைக் கையாண்ட விதம் வேறு. அப்போது நமது மத்திய, மாநில அரசுகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் வறட்சி நிலவுகிறது என்பதனை தீவிரமாக அறிந்து அதற்குரிய நிவாரணப் பணிகளுக்கும், அதைச் சார்ந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அரசின் நிதிக் கருவூலத்தை வறட்சி நிவாரணப் பணிகளுக்குச் செலவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முழுமையான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
இம்மாத நாயகரைக் காண செல்லும் பொழுதே, உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பயணத்தைத் துவங்கினோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூர் செல்லும் சாலையில் அமைந்த்துள்ளது, திரு. சுந்தரராமன் அய்யா அவர்களின் இலட்சுமி தாளாண்மைப் பண்ணை. திரு. சுந்தரராமன் அய்யா அவர்களைப் பற்றி அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறோம். நம் தாளாண்மை மலர்கிறது இதழின் முன்னோடி இவரே. அவரும், நண்பர் பாமயனும் இணைந்து துவங்கியதே, தாளாண்மை /தற்சார்பு இயக்கம். அவர்கள் வழி வந்தே நம் இவ்விதழின் வழியாக இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மாற்று வாழ்வியல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி செய்திகளைப் பறிமாறிக் கொள்கிறோம்.
நாம் அய்யாவிடம் இது நாள் வரை நெருங்கிப் பழகியதில்லை. சில இயற்கை வேளாண் கருத்தரங்குகளில் அவர் உரையாற்றக் கேட்டிருக்கிறோம். ஓரிரு முறை நண்பர்கள் இல்லங்களில் சந்தித்துள்ளோம். அவரது உரைகளைக் கேட்ட போதெல்லாம், அவர் வேளாண்மையை, விவசாயிகளை எவ்வளவு நேசிக்கிறார் என்று உணர்ந்திருக்கிறோம். எனவே தான் இந்த நேர்காணலை மிக்க ஆவலுடன் எதிர் நோக்கினோம்.
காலை அவர் பண்ணையை அடைந்ததும் வெயிலுக்கு இதமாக மோர் அருந்தி விட்டு, உரையாடலைத் தொடங்கினோம். திரு. சுந்தரராமன் அய்யா, இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையாக நான்கு விதமான அமைப்புகளை நிறுவி, பல வருடங்களாக திறம்பட இயக்கி வருகிறார்.