சிறுதானிய ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
- சிறுதானியம் (வரகு, சாமை, தினை, குதிரைவாலி) - 1/2 கோப்பை
- உளுந்த மாவு - கால் கோப்பை
- மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
- கேரட் - 2 மேசைக்கரண்டி
- பீன்ஸ், முட்டைகோஸ் - 2 மேசைக்கரண்டி
- குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி
- தேங்காய்துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- பொடித்த முந்திரி பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- செக்கு நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய் எல்லாவற்றையும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறுதானியத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். உளுந்த மாவையும் பச்சை வாசனை போகும் வரை வறுத்து வைக்கவும். வறுத்து பொடித்த சிறுதானியம் மற்றும் உளுந்த மாவை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலந்து அதனுடன் மோர் ஊற்றி கரைத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்துருவல் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
ஊத்தாப்ப மாவு பதத்திற்கு கலந்த பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பின் ஊத்தாப்பம் இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதனை தேங்காய் அல்லது மல்லி சட்னியுடன் பரிமாறவும்.