வாழ்வும் உண்டோ வையந் தனிலே?
பசிப்பிணி போக்கவே பசுமைப் புரட்சியாம்
பீற்று கின்றார் பீடைகள் எல்லாம்
சோற்றுக் கின்றிச் சொத்தெலாம் இழந்து
உயிரே போனபின் உலை எதற்காம்
உரக்கடை வைத்தவன் உயர்விதை என்றவன்
நஞ்சுகளாலே நெஞ்சுரங் கொன்றவன்
பணத்தை அள்ளவே பசுமைப் புரட்சியாம்
பணமும் பதவியும் பசியெனக் கொண்டார்
பட்டினிச் சாவுகள் பரிசெனக் கொடுத்தார்
பணமிகப் படைத்தவர் பாழும் நுகர்வால்
உலகைச் சுரண்ட உவப்புடன் அலைவார்
இயற்கையைத் தொலைத்து ஈட்டுவ தென்னவோ
மண்ணைக் கெடுத்தவர் மாண்புறு வாரோ
உழவர் இலையேல் உண்பதும் எதுவோ
பணத்தையே உண்டு பசியாறு வாரோ
மனிதமும் மண்ணும் மடிந்த பின்னே
வாழ்வெதும் உண்டோ வையகந் தனிலே?