கரிம அளவைக் கூட்டுவது
மண் மேலாண்மை நுட்பத்தின் முதல் அடிப்படை மண்ணின் கரிமச் சத்தை அதிகரிப்பதே. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவே மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கின்றது. கரிமப் பொருள் அதிகரிக்கப்பட்ட மண்ணில் அனைத்து வகை நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வாழ் உயிரினங்களின் செயல்திறனும் அதிகரிக்கின்றது. பயிர் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான அனைத்துப் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் பயிருக்கு இயல்பான முறையிலும், சிறப்பான நிலையிலும், தேவையான அளவிலும் தொடர்ந்து கிடைக்கின்றன. மண் துகள் அமைப்பு சீர்பட்டு மண் பொலபொலப்பாகின்றது. எனவே, காற்றோட்டமும், நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. கரிம அளவு கூடும் பொழுது மண்ணின் கார அமில நிலை (PH) மேம்படுகின்றது. பயிர்களுக்கு மிக இன்றியமையாத வேர்ப்பூசண உறவு நிலை (மைக்கோரைசா) ஏற்படுகின்றது.
கரிமச் சத்தை மண்ணிலே அதிகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
தொழு எரு (FYM - farm yard manure)
மண்ணின் கரிமச் சத்தை உயர்த்துவதற்கு நம் முன்னோர்கள் அதிக அளவில் கடைப்பிடித்த ஒரு முறை தொழு எருவைத் தொடர்ந்து நிலத்தில் சேர்த்ததே ஆகும்.
உழவுத் தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது. பயிர்ச் சாகுபடியின் போது கிடைக்கும் கழிவுகள் கால்நடைகளுக்கான உணவாகின்றன. கம்பு, சோளம், போன்ற தானியப் பயிர்களின் தட்டையும், வைக்கோலும், தவிடும், பிண்ணாக்கும், பருத்திக் கொட்டையும், வயல் வரப்புகளில் விளைந்து கிடக்கும் புல்-பூண்டுகளும் கால்நடைகளுக்கான உணவாக அமைகின்றது.
இவைகளின் கழிவுகளான மாட்டுச் சாணமும், ஆட்டுப் புழுக்கையும், கால்நடைகளின் தீவனக் கழிவுகளும், ஒன்றாக குவிக்கப்படும் ஒவ்வொரு முறை உழவின் போதும் குவிக்கப்பட்டுள்ள தொழு எரு நிலத்தில் இடப்படும் பெரும் பகுதி மட்கிய நிலையில் உள்ள இந்தத் தொழு எரு நிலத்தின் தன்மையை நன்கு மேம்படுத்தும். இவ்வெரு மண்வாழ் உயிரினங்களுக்கான மிகச் சிறந்த உணவாகும். இவ்வெரு இடுவதன் மூலம் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால் உயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் கிடைக்கின்றது.
தொழு எருவைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் தேவை. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தொழு எரு வீணாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிழலுள்ள மேடான இடத்தில் கால்நடைக் கழிவு, மற்றும் தீவனக் கழிவுகளைக் கொட்டி வைத்து அடிக்கடிப் புரட்டிக் கொடுப்பதும், போதிய ஈரம் உள்ளவாறு பார்த்துக் கொள்வதும் இன்றியமையாதது. தொழு எருவில் மணிச்சத்து சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதைச் சரி செய்ய கால்நடைகளின் சாணக் கழிவுகளோடு அவற்றின் சிறுநீரையும் சேர்த்துவர வேண்டும்.
தொழு எருவை நிலத்தில் இடும் பொழுது, நீர்பாயும் வசதியுள்ள நன்செய் மற்றும் தோட்டக்கால் நிலங்களுக்கு கூடுதலாகவும், மானாவாரி நிலங்களுக்குச் சற்றுக் குறைவாகவும் இட வேண்டும்.
அதாவது, மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்குப் பதினைந்து முதல் இருபது வண்டி அளவு போதுமானவை. பாசன வசதி உள்ள நிலங்களுக்கு 25 முதல் 35 வண்டி அளவி வரை இடலாம். நீர்வசதி நிறைந்த இடத்தில் விளைவிக்கப்படும் கரும்பு, மக்காச்சோளம், காய்கறிப் பயிர்கள், பழ மரங்கள் ஆகியவற்றுக்கு 40 முதல் 50 வண்டி வரை தொழு எரு இடலாம்.
மட்கு எரு (compost)
பண்ணையில் கிடைக்கக்கூடிய அனைத்துப் பயிர்க் கழிவுகள் கால்நடைக் கழிவுகள், சாம்பல், வண்டல், பசுந்தழைகள், கால்நடைகளின் சிறுநீர் கலந்த மண், மீன் கழிவுகள் ஆகியவைகளை வைத்து மட்கு எரு தயாரிக்கப்படும். மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்படும் மட்கு எருவில் மண் வளத்தை உயர்த்தக்கூடிய அனைத்துக் கூறுகளும் உண்டு. மட்கு எருத் தயாரிப்பையும், அதன் பயன்பாட்டையும், பல்வேறு அறிவியலாளர்களும், வெவ்வேறு முறையான ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்படும் மட்கு எருவில் மிகக் கூடுதலாகவே பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் உள்ளன.
காய்ந்த குச்சிகள் மற்றும் பயிர்களின் கடினமான பகுதிகள் அதாவது தட்டை, தாள், சூரிய காந்திப்பூவின் அடிப்பகுதி, மக்காச் சோளக் கதிரின் தக்கை முதலான பகுதிகளை முதல் அடுக்காகப் போட வேண்டும். 5 அடி அகலத்தில் தேவையான நீளத்தில் இந்தப் படுக்கையைப் போட வேண்டும். ஏறத்தாழ, 3/4 அடி உயரத்திற்குப் போடப்பட்ட இந்த அடுக்கின் மீது சாணம், சிறுநீர் கலந்த சற்றுக் கெட்டியான கரைசல் ஊற்றப்பட வேண்டும். இதன்மீது பசுந்தழைகள் 3/4 அடி உயரம் இடப்பட வேண்டும். இதன் மீது நெல் உமிச்சாம்பல், அடுப்புச் சாம்பல் போன்றவைகளை இரண்டு அங்குல உயரம் இட வேண்டும். இப்படி அனைத்துக் கழிவுகளையும் ஒவ்வோர் அடுக்காக இட்டு வர வேண்டும். நான்கிலிருந்து ஐந்த அடி உயரம் வந்தவுடன் மேலே தோட்டத்து மண்ணை இரண்டு அங்குல அளவுச் சிதறி நீரைத் தெளித்து விடவேண்டும். கூடுதல் ஈரமும், குறைவான ஈரமும் மட்டுப்படுக்கையில் நுண்ணுயிர்களின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். எனவே, போதிய ஈரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படுக்கையை இருபது நாட்களுக்கு ஒரு முறையாகப் புரட்டிவிட வேண்டும். அப்போது போதிய ஈரம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை புரட்டியபின் இந்தப் படுக்கை நன்கு மட்கி விடும். இதை நாம் முடிந்தவரை உடனே நிலத்திலிட்டு உழுதுவிட வேண்டும். அல்லது, பயிர்களுக்கு அருகில் இட்டு மூடிவிட வேண்டும். ஏனெனில், மட்கு நன்கு உழுவானதற்குப் பின்னரும் தொடர்ந்து வைத்திருப்போமேயானால் இம்மட்கில் நுண்ணுயிரிகளால் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தழைச்சத்து முதலான சத்துக்களை படிப்படியாக இழந்துவிட வேண்டும். நிழல் மிகுந்த இடத்திலேயே மட்கு எரு தயாரிக்ப்படல் வேண்டும்.
பல்வேறு ஆய்வாளர்களின் சோதனைகள் காட்டியுள்ளபடி மட்கு எரு தொடர்ந்து இடப்பட்டு வரும் நிலம் மிக வளமான நிலமாக மாறும்.
கிடை வைத்தல்
ஆடு மற்றும் மாடுகளை நிலத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் அவைகளின் பசுஞ்சானக் கழிவையும், சிறு நீரையும் மண்ணில் சேர்ப்பது என்பது மண் வளத்தைப் பேணும் மரபு வழிப்பட்ட ஒரு நுட்பமாகும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ஆடுகள் வரை நிறுத்தப்படும். அதேபோல் இரண்டாயிரம் மாடுகள் வரை ஓர் ஏக்கர் நிலத்தில் நிறுத்தி வைக்கப்படும். இவைகள் இடும் சாணமும், சிறுநீரும் உழுவதன் மூலம் மண்ணில் நன்றாகக் கலக்கப்படும்.
கிடை வைப்பதற்கென்றே தனி இன மாடுகள் பெரும் எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. மலை மாடுகள் அல்லது கிடைமாடுகள் என்று அவை அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய இம்மாடுகள் பகலில் பல்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டு இரவில் தேவைப்படும் நிலங்களில் அடைக்கப்படும். செம்மரி மற்றும் வெள்ளாடுகளும் இவ்வாறே பகலில் மேய்ச்சலுக்குப் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு இரவில் குறிப்பிட்ட நிலத்தில் அடைக்கப்படும்.
“ஆட்டெரு அவ்வருடம், மாட்டெரு மறு வருடம்” என்ற முதுமொழி இன்றும் நடைமுறையில் உள்ளது. இளந்தளிர்களையும், பயிர்களின் மென்மையான பகுதிகளையும் உணவாகக் கொள்ளும் ஆட்டின் கழிவு உடனே மட்கம் தன்மையுடன் இருக்கும். சற்று கடினமான பயிர்ப் பகுதிகளையும், முதிர்ந்த தாள் தட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும் மாட்டின் கழிவு மட்குவதற்குச் சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும் . கிடை வைக்கப்படாத நிலமே தமிழகத்தில் இல்லை என்ற நிலை அண்மைக்காலம் வரை இருந்தது. கிடை வைப்பதன் மூலம் கால்நடைகளின் சிறுநீர் நிலத்தில் பெருமளவு சேர்வதால் தழைச்சத்தும், பாசுவரச் சத்தும் பயிர்களுக்குக் கூடுதலாய் கிடைக்கும். நிலத்தில் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் மிகுதியாகும்.
பசுந்தாள் எரு
ஒரு பயிரை சாகுபடி செய்வதற்கு முன்னால், அந்நிலத்தில் சில வகைப் பயிர்களை வளர்த்து மடக்கி உழுவதையேப் பசுந்தாள் எருவிடுதல் என்கின்றோம். இதுவும் ஒரு மரபு வழி நுட்பமேயாகும்.
தக்கைப் பூடு, சணப்பு, அகத்தி, கொளுஞ்சி, அவுரி போன்ற பயறு வகைப் பயிர்களை வளர்த்து, அப்படியே நிலத்தில் மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் பயிரை பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதால் நார்ப்பொருள் அப்பயிரில் இல்லாமலிருக்கும். எனவே, இளம் பசுந்தாள்ப் பயிர் உடனே மட்கிவிடும். கூடுதல் தழைச்சத்து நிலத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால், இளம்பயிரை மடக்கி உழும் பொழுது நிலத்தில் சேரும் கரிமப் பொருளின் அளவு குறைவாகத் தான் இருக்கும். முதிர்ந்த நிலையில் உள்ள பசுந்தாள் பயிர் நிலத்தில் கூடுதல் மட்கைச் சேர்க்கும். ஆனால் மிக மெதுவாகத் தான் இதன் பலன் பயிருக்கும் கிடைக்கும்.
எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப் போகும் பயிருக்கு ஏற்றவாறும், சாகுபடிப் பயிர் வைக்கப் போகும் காலத்தை மனதில் கொண்டும் பசுந்தாள் எருவைப் பயன்படுத்த வேண்டும்.
-(தொடரும்)