[பொருள் என்பது உணவு போல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது - ஆனால் உணவு அளவுக்கு அதிகமானதால் இப்போது உலகமெங்கும் ஏற்பட்டுள்ள நோய்களையும், நலக்கேடுகளையும் காண்கிறோம். இதே போல் பணம், வசதி போன்றவையும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் குமுக சூழல் உள்ளது. பொருளையும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்பவன் துறவி. போதும் என்று சொல்பவன் அறிஞன். வீரம் என்பது தீரச் செயல்கள் மட்டுமே அல்ல - தன் தேவையுடன் நுகர்ச்சியை நிறுத்திக் கொள்வதும் ஒரு மிகப் பெரிய குமுக வீரமே. கணவனும், மனைவியுமாய் வாய்ப்புக்கள் இருந்தும் பொருட் தேடலில் இருந்து விருப்பமுடன் வெளியேறி ஒரு தற்சார்புப் பாதையில் போவது அரிது. அவ்வாறு வெளியேறி நம்மிடையே அமைதியாய் இருக்கும் நாயகர்களை இனங்கண்டு கொள்ளும் முயற்சியாக இத்தொடர் உள்ளது.]
இம்மாத நாயகர் குடும்பத்தைச் சந்திப்பதற்காக, மீண்டும் கோவைக்கு மேற்கே சிறுவாணி சாலையில் பயணம், இம்மாத நாயகர் குடும்பத்தைச் சந்திப்பதற்காக. மனதிற்கு இதமான மேற்கு மலைத் தொடரின் பின்னணி, சாலைக்கு இரு மருங்கிலும், மஞ்சள், வாழைத் தோட்டங்கள், கமுகு மற்றும் தென்னந்தோப்புகள். மெல்லிய காற்று, முந்தைய நாள் பெய்த மழையின் ஈரத் தடங்கள் யாவும் ஒன்று சேர்ந்து நம்மை உவப்புறச் செய்கின்றன. இம்மாத நாயகர் தம்பதிகள் சிவகணேசன், அனிதா அவர்களின் தோட்டம் போளுவம்பட்டி கிராமத்திலிருந்து, செம்மேடு கிராமம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ஒன்பது ஏக்கர் பண்ணையில் பல வித பயிர்களை விளைவிக்கிறார்கள். சிவகணேசனிடம், பண்ணையின் பயிர்த் திட்டத்தை பற்றிக் கேட்டோம். அவர், சுபாஷ் பாலேகர் அவர்களின் பண்ணை அமைப்பு முறையையொட்டி, தம் தோட்டத்தை அமைத்திருப்பதாகக் கூறினார்.
தற்போது, தாராள மயமாக்கத்தின் பின், உணவு என்பது ஆலைமயமான உற்பத்தியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதனால் உணவை உற்பத்தி செய்யும் உழவன் தன் உற்பத்தியை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டி வருகிறது. உணவை வாங்கும் நுகர்வோரோ மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. மேலை நாடுகளில் பதப்படுத்தப் படாத இயற்கை உணவை விற்பதோ, வினியோகம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதும்படி சட்ட திருத்தங்கள் தொடர்ந்து செய்து வரப் படுகின்றன. (எடுத்துக் காட்டாக அதிவெப்பத்திற்குக் காய்ச்சாத பாலை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்).
ஆலைமயமான உணவில் உள்ள தீமைகளை நாம் 'அடிசில் பார்வை' மற்றும் 'அடிசில் தீர்வு' தொடர்களில் பார்த்து வருகிறோம். இச்சூழலில், உழவர்களுக்கு ஒரு நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு 100% இயற்கையான உணவுகளை வினியோகம் செய்யவும் லாப நோக்கற்ற (அல்லது அளவான லாபத்தை நோக்கிய) சந்தை முயற்சிகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. முன்பே தாளாண்மையில் கூறியது போல் பண்டை வாணிப முறையில் நல்லுறவு நிறைந்த வணிகம், பெரும் லாபமும் பேராசையும் இல்லாத சிறு வணிகம் இருந்தது. இன்று பள்ளிகள் முதல் மருத்துவம் வரை எல்லாவற்றிலும் தவறான மனிதர்கள், தவறான வழிமுறைகள் வந்துள்ள நிலையில் இயற்கை அங்காடிகளிலும் தவறானவர்களும் தவறுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் தான் நமது விழிப்புணர்வின் மூலம் பிரித்தறிய வேண்டும்.
[தாளாண்மை தற்சார்பு வாழ்வியலைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுகிறது. அகிம்சை என்பது நம் கோட்பாட்டில் இன்றியமையாத ஒன்று. அதில் புலால் உண்ணாமை ஒரு முக்கியக் கூறு. எனினும், நாம் அடிக்கடி கூறுவது போல, உணவும், தொழிலும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. உணவே தொழிலாகக் கொள்ளும் உழவன் அகிம்சையைக் கடைப்பிடிப்பது கடினமே. உழவன் பொருளாதார விடுதலையும் முன்னேற்றமும் அடையக் கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பசுமை வெங்கிடாசலம் அவர்களின் இப்பரிந்துரையை அவரவர் தம் சூழலுக்கும், மனசாட்சிக்கும், பொருட்தேவைக்கும் ஏற்பச் செயல் படுத்திக்கொள்ளவும் - ஆசிரியர் ]
டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு 2.5 ஏக்கர் பண்ணையை எப்படி ஒரு தற்சார்பு பண்ணையாக மாற்றுவது என்று சென்ற இதழில் பார்த்தோம். தொடர்ந்து அதை நடைமுறைப் படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகள், செலவினங்கள், அதன் வருவாய் எப்படி இருக்கும், அதற்குண்டான தொடர் தொழில்நுட்பம் பற்றியும் தோராயமான வரவு செலவு பற்றியும் இந்த இதழில் காண்போம். விவசாயத்தில் செலவு என்பது இரு வகைப்பட்டது. முதலீடு என்பது நிலைத்திருக்கக் கூடியது. இடுபொருட் செலவு என்பது ஒவ்வொரு அறுவடையுடனும் தீர்ந்து விடக் கூடியது.நாம் செய்யும் செலவுகளை மூன்று விதமாக பிரித்துக்கொள்ள வேண்டும்.