படிப்பதைப் பற்றி …
செம்மை வாய்ந்த பண்டை இலக்கியங்களைப் படிப்பதை வீண் என்றும், அவை நவீன, நடைமுறை நூல்களுக்கு வழிவிட்டு விடும் என்றும் சிலர் சிலநேரங்களில் பேசுகிறார்கள்; ஆனால் வீரமுள்ள மாணவன் எப்போதுமே செவ்விலக்கியங்களைப் படிப்பான், அவை எந்த மொழியில் எழுதப் பட்டாலும், எத்துணை பழமையாயினும். ஏனெனனில் நல் இலக்கியம் என்பது மனிதனின் மிக உயர்ந்த சிந்தனைகளின் பதிப்பு அல்லவா? பழையதாகி விட்டது என்று நாம் இயற்கையைக் கற்காமல் புறக்கணிப்போமா?
நன்றாய்ப் படிப்பது என்றால், நேர்மையான நூல்களை நேர்மையான உணர்வுடன் படிப்பது. இது ஒரு மிகச் சிறந்த பயிற்சி; தற்காலப் பழக்கங்களையும் பயிற்சிகளையும் விட அது கடினமானதாகவே இருக்கும். தன் உடற்பயிற்சிக்காக வாழ்நாளையே அர்ப்பணிக்கும் விளையாட்டு வீரனைப் போன்ற பயிற்சி, இலக்கியங்களைப் படிக்கத் தேவை. ஒரு நூலை எழுத எவ்வளவு நேரமும், உழைப்பும் தேவைப்பட்டதோ அதே உழைப்புடன் அதைப் படிக்கவும் வேண்டும்.
நாம் ஒரு மேடைப் பேச்சாளனின் திறமையை எவ்வளவுதான் பாராட்டினாலும், நம் உயர்ந்த எழுத்துக்கள், பேச்சைத் தாண்டி மிக உயரத்தில் உள்ளன - மேகத்தைத் தாண்டி உள்ள வானையும் விண்மீன்களையும் போல!
நட்சத்திரங்கள் அங்கே உள்ளன; அவற்றைப் படிக்க முடிந்தவர்கள் படிக்கிறார்கள். வான சாத்திரம் கற்றவர்கள் எப்போதும் அவற்றைப் பார்த்து விளக்குகிறார்கள். நாம் அன்றாடம் பேசும் பேச்சைப் போல அவை வெற்று வெளிமூச்சுக்கள் அல்ல. மேடையில் வாதம் என்று போற்றப்படுவது பெரும்பாலும் படிப்பறையில் முடவாதமாகவே அறியப்படுகின்றது.
பேச்சாளன் தாற்காலிகமான ஒரு நிகழ்வுக்காய், தன்முன் உள்ள, தன் குரலைக் கேட்கக் கூடிய, உடனடி மக்களால் உவகை பெற்றுப் பேசுகின்றான்; ஆனால் எழுத்தாளனுக்கோ, பேச்சாளானை ஊக்குவிக்கும் நிகழ்வும், கூட்டமும் ஒரு தொல்லையாகவே இருக்கும். அவன் சலனம் குறைந்த தன் வாழ்வினால் உவகை பெற்று மனித இனத்தின் அறிவிற்கும் நலத்திற்கும் எழுதுகிறான் - தன்னைப் புரிந்து கொள்ளக் கூடிய வருங்காலத்து மாந்தர் அனைவருக்குமாய்!
- Walden or Life in The Woods - Chapter 3 Reading