1. ஆடு வளர்ப்பும் இடு பொருள் செலவும்
விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற அச்சப்படுவது, இயற்கை முறையில் பயிர் செய்யும் போது அதிக இன்னல்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக. ஆனால் இயற்கைக்கு மாறாமல் மிக அதிக இன்னல்களைச் சந்திக்கின்றார்கள் என்பதே நடைமுறை உண்மை. நான் இரசாயன முறையில் நெல் விவசாயம் செய்யும் போது எனக்கு ஒரு ஏக்கருக்கு 16000 ரூபாய் செலவு ஆனது. அதையே இயற்கை முறையில் செய்யும்போது 8000 முதல் 11000 வரையே செலவு செய்கின்றேன். (ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் அறவே இல்லை. இதுவே ஏக்கருக்கு 4000 முதல் 5000 வரை ஆகும்).
நான் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதாக முடிவு எடுத்தவுடன் ஆடு வளர்க்கவும் திட்டம் போட்டு அதற்காக கொட்டகை மற்றும் தீவனப்பயிர்களை வளர்த்து ஆடுகளை வாங்கினேன். இயற்கை விவசாயத்திற்கு மிகவும் முக்கியமாக ஆட்டு உரம் தேவை என்பதால் இந்த முடிவெடுத்தேன். அது ஒருபுறமிருக்க ஒரு வருடத்திற்கு ஒரு ஆண்டின் மூலம் 10,000 முதல் 12000 வரை குட்டிகள் விற்பதன் மூலம் வருவாய் வந்தது. ஒரு ஆடு வருடத்திற்கு ஒரு முறை குட்டி போட்டாலும் ஒரு குட்டி என்றால் ஒரு வருடத்தில் அதை 10,000 ரூபாய்க்கும், இரண்டு குட்டி என்றால் 12000-14000 ரூபாய்க்கும் விற்பனை செய்துவிடலாம்.
'சிறியதே அழகு' (Small is Beautiful') என்ற புத்தகம் இன்று உலகம் முழுவதும் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதைத் தொகுத்தவர் ஜெர்மனியில் பிறந்த E. F. ஷூமாகர் என்பவர். இவர் பொருளாதாரம் பயின்று நியுயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். செயல் அனுபவம் இல்லாத கொள்கை வகுத்தலில் திருப்தி அடையாத அவர் அதில் இருந்து விலகி நேரிடையாக வர்த்தகம், வேளாண் பண்ணைத்தொழில், பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றார். பின் தான் பெற்ற அனுபவங்களை ஆராய்ந்து இந்த உலகில் உள்ள மக்கள் நிரந்தரமாக இன்பமாக வாழ எந்த முறையான தொழில் முறைகளையும், விவசாய முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மிக விரிவாக விவரிக்கிறார். இந்தக் கொள்கை இன்றைய சூழலில் மிகவும் ஏற்புடையதாகும். கிராமப்புற முன்னேற்றம் குறித்து பல பிரச்சினைகளுக்கு பல வெளிநாடுகளுக்கு ஆலோசனை வழங்கியவர். பிரிட்டனில் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான மண் குழுமம் (Soil Association) எனும் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். 1977 இல் மரணமடைந்தார்.
இந்தப் புத்தகத்தில் இவர் பூமியின் இயற்கை வளம் மனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்கிறார். எந்த ஒரு இயற்கை வளத்தையும் கணக்கு வழக்கின்றிச் சூறையாடுவது, அதிலும் குறிப்பாக அவை அற்றுப்போய்விடும்படி சுரண்டுவது பெரிய குற்றம். மனிதன் தனது பேராசை, பொறாமை முதலிய குணங்களால் வழிநடத்தப்படும்போது அவனுக்கே,அவன் சந்ததிக்கே தீங்கிழைத்து அழிவைத்தேடுகிறான். அவனது வேட்கையின் வேகத்தில் அது அவனுக்குத் தெரிவதில்லை என்கிறார் ( உதாரணம்,பெட்ரோல், நிலக்கரி).
முனைவர் து. செந்திவேல், பேராசிரியர் (உழவியல்)
[ஆசிரியர் குறிப்பு: உணவு என்பதும், தொழில் என்பதும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. தற்சார்பு வாழ்வியல் என்பது வன்முறையைக் குறைத்து (அதற்காக நுகர்ச்சியைக் குறைத்து) வாழ முற்படும் ஒரு அகிம்சை நெறி. மாறாக உழவன் விடுதலை என்பதற்கு உழவன் பொருளாதார விடுதலை பெறுதல் முதற்கட்டம். இக்கட்டுரை ஆசிரியர் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறை முனைவர். இவர் எழுதியுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்பக் கட்டுரை உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிகளை விளக்குகிறது. இதை உழவர்கள் அவரவர் சூழலுக்கும், தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்]