கேழ்வரகு இட்லி
இன்று ஓரளவு பிரபலம் அடைந்து வரும் சத்து மிகுந்த உணவுகள் நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்பதே. இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்து சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் அல்ல, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும். கேழ்வரகில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது.
கேழ்வரகு மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும். ‘கேழ்வரகு’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக தினமும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் வாரம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். கேழ்வரகுயில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நாம் அன்றாடம் செய்யும் இட்லியை போல் கேழ்வரகுயில் எவ்வாறு இட்லி செய்வது என்று பார்போம். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவு.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - நான்கு கப்
- உளுந்து - அரை கோப்பை
- உப்பு - தேவையான அளவு
- வெந்தயம் சிறிது.
செய்முறை
உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரவை இயந்திரத்தில் (மிக்சி/கிரைண்டர்) மைய அரைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும். கம்பு சட்னி, பூண்டு சட்னியுடன் சுவையாக இருக்கும்.