தினை -மிளகு அடை - நாச்சாள்
தினை புஞ்சைத் தவசங்களில் சிறப்பானது. மிகக் குறைந்த நீர்த் தேவையே உள்ள தினை, மானாவாரியில் , எல்லா நிலப் பரப்பிலும், எந்த வித செயற்கை உரமோ, பூச்சிக் கொல்லியோ தேவையின்றி மிக எளிதாக வளர்ந்து உழவனுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது. தமிழரின் பாரம்பரிய உணவுகளில் சிறப்பான இடம் பிடித்துள்ளது. 'தினைத்தனை உள்ளதோர் பூவினிற் தேன் உண்ணாதே' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தினையின் நுண்ணிய தன்மையைக் குறிப்பிடுகிறார். மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது! தினையும் மிளகும் சேர்ந்த அடை செய்வது எப்படி என்று இவ்விதழில் காண்போம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 1 கோப்பைஉ.பருப்பு - 1/4 கோப்பை
து. பருப்பு & க.பருப்பு சிறிதளவு
தேங்காய் துருவல்
சிறிது மிளகு
சீரகம்
பெருங்காயம்
சிறிது உப்பு
தேவையான அளவு செக்கு க.எண்ணை - தேவையான அளவு
செய்முறை
தினை மற்றும் பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை தோசை கல்லில் அடை பதத்தில் வார்த்து எண்ணை சேர்த்து முன் பக்கமும் பின் பக்கமும் லேசான தீயில் சுட்டு எடுக்கவும். கடலை சட்னி அல்லது வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிடலாம். கார்த்திகைக்கு இந்த தினை மிளகு அடை விசேடமானது.