சென்ற மாதம் இழப்புக்கள் மிகவும் வருத்தப் பட வேன்டியவை. ஒன்று முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் காலம். அரசியலில் நல்லவர்கள் என்று இப்போது யாரும் இருப்பதில்லை. நல்லவர்களாய் இருந்தால் அவர்கள் அரசியலில் நிலைப்பதில்லை; நிலைக்கவிடுவதில்லை. இச் சூழலில் அணு விஞ்ஞானியான அப்துல் காலம் குடியரசுத் தலைவர் ஆனதும் அதன் பின்னர் மிகவும் எளிமையாகத் தன் வாழ்வை வாழ்ந்ததும் தற்போதைய இந்தியாவில் ஒரு வியப்பான நிகழ்வே. மையப் பொருளாதாரம், தொழில்நுட்பம், அணுவாற்றல் போன்றவற்றை திரு கலாம் நம்பினாலும். அவரின் தனி மனித ஒழுக்கமும், நேர்மையும், எளிமையும் எல்லோருக்கும் பாடமாய் அமையும் என்பதில் ஐயமில்லை. அவர் மறைவுக்கு நாடே திரண்டு அஞ்சலி செலுத்தியது தற்செயலாய், இயல்பாய் நிகழ்ந்த ஒன்று யாரும் இதை எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ இல்லை. இது அவரின் வாழ்நெறிக்குச் சான்றாயினும், அதன் அடிப்படை உண்மை பொது வாழ்வியல் நல்லவர்களின் வறட்சியே.
[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, Sustainable Livelihood Institute என்ற பெயரில் முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார்]
புதுப்புது இலக்குகளுக்கு நாம் இரையாவோமா?
நிலைத்தன்மை என்றால் என்ன ?
இந்தக் கேள்வியைப் பல கோணங்களில் காணவேண்டியுள்ளது. வரும் மாதங்களில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை [Millioneum Development Goals (MDG)] உலக நிறுவனங்கள் கைவிட்டு, அதற்கு மாற்றாக நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை [Sustainable Development Goals (SDG)] அறிவிக்க உள்ளன. ஏற்கனவே உள்ள இலக்குகளை எட்டாத இயலாமையை மறைக்கப் புதுப்புது இலக்குகள் நிர்ணயிப்பது பொதுவாகத் திட்டமிடுவோரின் ஒரு கண்கட்டு வித்தை. இவற்றை வரையறுப்பது யார்? உலகுக்கு எது ‘வளர்ச்சி இலக்கு’ என்று சொல்ல யாருக்கு உரிமையோ புரிதலோ உள்ளது? இது எதனைக்கொண்டு வரையறுக்கப் படுகிறது? என்று பல கேள்விகள் நமக்கு எழவேண்டும். நமது கிராமப்புற மக்களின் இன்னல்களைப் போக்குகி்றோம் என்ற பெயரால் ஏறத்தாழ ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் குடும்பமும் மூன்று முதல் எட்டு அரசுத் திட்டங்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்பட்டுள்ளன. இப்போழுது ஒவ்வொரு ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு விதமான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
திட்டமிட்ட பொருளாதாரம்
உடல்நலம் என்பது நல்ல சமச்சீரான உணவு உண்பதைச் சார்ந்து இருப்பதைப்போல், ஒரு சமூகத்தின் நல்வாழ்வு என்பது அதன் வேலைகளும் தொழில்களும் சமச்சீராய் நிர்வகிக்கப்படுவதைச் சார்ந்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அதன் குடிமக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தரத் தேவையான அளவு கைத்தொழில் வல்லுனர்களும் தேவை. அடிப்படை உணவைத் தாண்டி மனிதனுக்குப் பிற தேவைகள் உள்ளன. ஒரு கிராமத்தில் எல்லோரும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டால் அக்கிராமத்தில் திறமைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் - இது ஒரு சமூகப் பற்றக்குறை நோயாக முடியும். நம் இந்தியாவில் இதுவே தற்போதைய பெரும் பிரச்சினை. எடுத்துக்காட்டாக, பண்டைய தங்க ஆசாரிகள் தங்கள் தொழிலை இழந்து விட்டார்கள்; அவர்களின் நுணுக்கமான விரல்கள் தெருப்போடக் கல்லுடைக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டன. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பரம்பரையாகப் பெற்ற திறமைகள் இப்போது வீணாகிக் கொண்டு இருக்கின்றன ; இது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கே ஒரு பேரிழப்பு. தற்போதைய மாறிவரும் சமூகத் தேவைக்கு ஏற்ப, கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம் போன்றவற்றின் தயாரிப்பில் நாம் பண்டைய தங்க ஆசாரிகளை ஈடுபடுத்தியிருந்தால், அவர்களின் திறமைகள் நன்றாய்ப் பயன்பட்டிருக்கும். தம் மண்ணின் மைந்தர்கள் வேலையின்றி வாடும்போது, இப்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது.