அனந்துவின் “செக்கழித்த செம்மல்கள்” கட்டுரையை ஆர்வத்துடன் படித்தேன். தாவர எண்ணைத் தயாரிப்புச் சட்டம் பற்றி அதில் வருகிறது. இதே காரணத்துக்காக 28.08.2012 அன்று சென்னையில் நான் வழங்கிய தீர்ப்பை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தீர்ப்பு 2012ம் ஆண்டு Writ Law Reporter என்ற தீர்ப்புக் கோர்வையில் 836வது பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
- நீதிபதி கே. சந்துரு
( அன்னபூர்ணா அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் நல்லெண்ணையுடன் பிற எண்ணைகளைக் கலந்து நல்லெண்ணை என்ற பெயரில் விற்றதைத் தடை செய்து நீதிபதி சந்துரு அவர்கள் இட்ட தீர்ப்பு. இதன் முழு வடிவத்தையும் http://kaani.org/dl/oil-judgement-justice-chandru.pdf என்ற இணைய தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் இதழைப் படித்துக் கருத்துக் கூறிய நீதிபதி சந்துருவுக்கு எங்கள் நன்றி - ஆசிரியர் )
ஆனி மாத தாளாண்மை இதழ் கண்டோம். மிக அருமையான தலையங்கம். மனிதர் தம் பேராசை இவ்வுலகை வேகமாக அழிவுக்கு உந்திக் கொண்டிருப்பதை சிறப்பாய்ச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். ஜெய்சங்கரின் மாடல்ல மறறையவை, நல்ல பயனுள்ள கட்டுரை. இளம்பாரதியின் ஆங்கில மருத்துவத்தை பற்றிய செய்திகள் உள்ளத்தை கொதிக்க செய்கின்றன. “தன்னிறைவு” சீனக் கவிதை நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.
- சம்பூரணம், பெரியபோது, பொள்ளாச்சி.