தினைக்காட்டில் கிளி விரட்டிய வள்ளியைக் காதல் கொண்ட முருகன் கதை நமக்குத் தெரிந்ததே. 'வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே' என்று கவிஞர் மெச்சுகிறார். தினை என்பது பழந்தமிழருடன் வரலாற்றுக்கு முற்பட்ட தொடர்புடையது. 'கருங்கால் வரகும், இருங்கதிர்த் தினையும்' என்று சங்க இலக்கியத்தில் சிறப்பிக்கப்பட்ட தினையின் சிறப்பைப் பாமயன் விசும்பின் துளியில் விளக்கியிருந்தார். Foxtail Millet என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்தவசம் மிகுந்த சத்துடையது.தன் எடையில் 10 விழுக்காட்டிற்கு மேல் புரதச் சத்தை உடைய தினை, உடல் உரம் ஏற்றி நலன் பேணக் கூடியது. இத் தினையில் எவ்வாறு “தேனும் தினை மாவும்” சேர்த்து ஒரு சுவையான சிற்றுண்டி செய்வது என்று இம்மாதம் காண்போம்.
- தினை - 3 கோப்பை
- தேன் - 1/2 முதல் 1 கோப்பை வரை (இனிப்பின் தேவையைப் பொறுத்து)
- ஏலக்காய்ப் பொடி - 4 சிட்டிகை
- நெய் - ஒரு பெரிய தேக்கரண்டி
- முந்திரி பருப்பு - 2 பெரிய தேக்கரண்டி
செய்முறை
தினையை வெறும் வாணலியில், மிதமான தீயில், 5 முதல் 7 நிமிடங்கள் வரை பொன்னிறமாக வறுக்கவும்.
இறக்கி ஆற வைத்துப் பின் பொடியாக மிக்சியில் (மாவுப் பதமாகவோ அல்லது ரவைப் பதமாகவோ - விருப்பத்திற்கு ஏற்ப) அரைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு, முந்திரிப் பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும்
இதனுடன் தினை மாவையும், ஏலப் பொடியையும் கலந்து நெய் சீராகப் பரவும் படி ஒரு நிமிட நேரம் கிளறவும்
அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி, ஓரளவு ஆற விட்டுப் பின் தேனைக் கலக்கவும்
சூடான பதத்தில் தேனை விட்டால் சவ்வு போல் ஆகிவிடும்
விருப்பமுள்ளோர் பால் மற்றும் தேங்காய்த் துருவலைக் கலக்கலாம் (ஆனால் பால் கலந்த லட்டு இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது)
தேன் மட்டுமே கொண்ட தினை உருண்டை 4-5 நாட்களுக்கு நன்றாக இருக்கும் ரவா லட்டு போல் சுவைக்கும் இவ்வுருண்டைகளின் சத்தைப் பற்றி நாம் புதிதாய் எதுவும் சொல்ல வேண்டியதில்லை!
